திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.122 திருஓமம்புலியூர் பண் - புறநீர்மை |
பூங்கொடி மடவாள் உமையொரு பாகம்
புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிருள் நட்டம் ஆடுமெம் விகிர்தர்
விருப்பொடும் உறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச்
செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழார் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
|
1 |
சம்பரற் கருளிச் சலந்தரன் வீயத்
தழலுமிழ் சக்கரம் படைத்த
எம்பெரு மானார் இமையவ ரேத்த
இனிதினங் குறைவிடம் வினவில்
அம்பர மாகி அழலுமிழ் புகையின்
ஆகுதி யால்மழை பொழியும்
உம்பர்க ளேத்தும் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
|
2 |
பாங்குடைத் தவத்துப் பகீரதற் கருளிப்
படர்சடைக் கரந்தநீர்க் கங்கை
தாங்குதல் தவிர்த்துத் தராதலத் திழித்த
தத்துவன் உறைவிடம் வினவில்
ஆங்கெரி மூன்றும் அமர்ந்துட னிருந்த
அங்கையால் ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
|
3 |
புற்றர வணிந்து நீறுமெய் பூசிப்
பூதங்கள் சூழ்தர வூரூர்
பெற்றமொன் றேறிப் பெய்பலி கொள்ளும்
பிரானவன் உறைவிடம் வினவிற்
கற்றநால் வேதம் அங்கமோ ராறுங்
கருத்தினார் அருத்தியாற் றெரியும்
உற்றபல் புகழார் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
|
4 |
நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர்
துயர்கெட நெடியமாற் கருளால்
அலைத்தவல் லசுரர் ஆசற வாழி
யளித்தவன் உறைவிடம் வினவிற்
சலத்தினாற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத்
தன்மையார் நன்மையால் மிக்க
உலப்பில்பல் புகழார் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
|
5 |
மணந்திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும்
மலியுமா றங்கம் ஐவேள்வி
இணைந்தநால் வேதம் மூன்றெரி யிரண்டு
பிறப்பென வொருமையா லுணருங்
குணங்களும் அவற்றின் கொள்பொருள் குற்றம்
மற்றவை யுற்றது மெல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
|
6 |
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
7 |
தலையொரு பத்துந் தடக்கைய திரட்டி
தானுடை அரக்க னொண்கயிலை
அலைவது செய்த அவன்றிறல் கெடுத்த
ஆதியார் உறைவிடம் வினவில்
மலையென வோங்கும் மாளிகை நிலவும்
மாமதில் மாற்றல ரென்றும்
உலவுபல் புகழார் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
|
8 |
கள்ளவிழ் மலர்மே லிருந்தவன் கரியோ
னென்றிவர் காண்பரி தாய
ஒள்ளெரி யுருவர் உமையவ ளோடும்
உகந்தினி துறைவிடம் வினவிற்
பள்ளநீர் வாளை பாய்தரு கழனி
பனிமலர்ச் சோலைசூ ழாலை
ஒள்ளிய புகழார் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
|
9 |
தெள்ளிய ரல்லாத் தேரரோ டமணர்
தடுக்கொடு சீவரம் உடுக்குங்
கள்ளமார் மனத்துக் கலதிகட் கருளாக்
கடவுளார் உறைவிடம் வினவில்
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்து
நலந்திகழ் மூன்றெரி யோம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.
|
10 |
விளைதரு வயலுள் வெயில்செறி பவளம்
மேதிகள் மேய்புலத் திடறி
ஒளிதர மல்கும் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யரனைக்
களிதரு நிவப்பிற் காண்டகு செல்வக்
காழியுள் ஞானசம் பந்தன்
அளிதரு பாடல் பத்தும்வல் லார்கள்
அமரலோ கத்திருப் பாரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |